நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

18.4.11

கருடனின் அம்சமாக அவதரித்தவர்



மதுரகவி ஆழ்வார்

திருநட்சத்திரம்:
சித்திரை - 5 - சித்திரை
(ஏப். 18)

திருக்கோளூர் - பாண்டிய நாட்டில் சிறந்து விளங்கிய இந்த ஊருக்கு இன்னுமோர் சிறப்பு சேர்ந்தது. அது - மதுரகவியாழ்வார் என்னும் வைணவ அடியாரைத் தோற்றுவித்த காரணத்தால்!

திருக்கோளூரில் சிறப்போடு வாழ்ந்த மக்களிடையே, முன்குடுமிச் சோழிய அந்தணர் மரபினரும் இருந்தனர். அந்த மரபில், முன்குடுமிச் சோழிய மரபு சிறக்கும் வண்ணம், ஈசுவர ஆண்டு சித்திரைத் திங்கள் வளர்பிறை பொருந்திய சதுர்த்தசி திதியில் வெள்ளிக்கிழமை, சித்திரை நட்சத்திரத்தில் ஸ்ரீவைனதேயாம்சராக (கருடனின் அம்சமாக) மதுரகவியாழ்வார் அவதரித்தார்.

இவர் தமிழ் மொழியிலும்,  வடமொழியிலும் புலமை பெற்றுத் திகழ்ந்தார். சிறந்த ஒழுக்கம், திருமாலிடம் அன்பு, பக்தி முதலியன வாய்க்கப் பெற்றிருந்தார்.  தமிழில் தேனினும் இனிய கவிதைகளைப் புனைந்து, திருமால் மீதான தம் பாடல்களைப் பாடிவந்தார். மதுரமான கவிதைகளைப் பாடிய காரணத்தால், இவருக்கு 'மதுரகவியார்' என்னும் பெயர் ஏற்பட்டது.

புண்ணியம் நல்கும் திருப்பதிகளான அயோத்தி, மதுரா, கயை, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை ஆகிய ஏழு தலங்களையும் சேவிக்க யாத்திரை சென்றார். இங்கெல்லாம் சென்று, இறைவனை சேவித்து, மறுபடியும் அயோத்தியை அடைந்தார். அங்கு அர்ச்சாவதார வடிவாய் எழுந்தருளியிருக்கின்ற ராமபிரானையும், சீதாபிராட்டியையும் சேவித்து திருவடி தொழுது அங்கு வசிக்கலானார்.

ஒருநாள் நள்ளிரவு. இவர் திருக்கோளூர் எம்பெருமானை எண்ணி, அந்தப் பதி இருக்கும் தென்திசை நோக்கித் தொழுதார். அப்போது அவர், தென்திசையில் வானுற வளர்ந்து விளங்கிய ஒரு திவ்வியமான பேரொளியைக் கண்டார். அந்தப் பேரொளி என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. அது இன்னதென்று அறியாமல், கிராம, நகரங்கள் ஏதும் வேகின்றனவோ? அல்லது காட்டுத் தீ சூழ்ந்ததோ? எனத் திகைத்து நின்றார். இவ்வாறே அடுத்த சில தினங்களிலும் கண்டு ஆச்சர்யத்தால் மேனி சிலிர்த்தார்.

அந்தத் திவ்விய ஒளி, முன்னினும் சிறப்புற அதிக ஒளி பொருந்தியதாய் விளக்கியதால், பெருவியப்புற்ற அவர், அதனைக் காணும் ஆசையோடு தென் திசை நோக்கிப் புறப்பட்டார். நெடுந்தொலைவு வந்து, அந்த ஒளியையே குறியாகக் கொண்டு நடந்து, இறுதியில் திருக்குருகூரை அடைந்தார். அதுவரையில் அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இவ்வளவு தூரம் நடத்தி அழைத்து வந்த அந்த ஒளி, திருக்குருகூரில் பொலிந்து நின்ற பிரான் திருக்கோயிலுக்குள் புகுந்து மறைந்துவிட்டது.

மதுரகவியார் அவ்வூரில் உள்ளவர்களைப் பார்த்து, ''இங்கு ஏதேனும் சிறப்புச் செய்தி உண்டோ?''  என்று கேட்டார்.  அவர்கள், அந்த ஊரில் வாழும் நம்மாழ்வாரது வரலாற்றைக் கூறினார்கள். நம்மாழ்வாரின் வரலாற்றைக் கேட்ட மதுரகவியார், கோயிலின் உள்ளே சென்று,  நம்மாழ்வாரைத் தரிசித்தார். புளியமரத்துப் பொந்தில் சின் முத்திரையோடு ஒருவர் எழுந்தருளியிருக்கிறார். அதுதான் விசேஷம் என்று அவ்வூர்க்காரர்கள் சொன்னது இவர் நினைவுக்கு வந்தது.

மௌனமாக இருந்த நம்மாழ்வாரைக் கண்டு ஆச்சரியப் பட்டார் மதுரகவிகள். இவருக்குக் கண் பார்வை உண்டா, காது கேட்குமா என்று கண்டுபிடிக்க ஒரு பாறாங்கல்லைத் தூக்கிக் கீழே போட்டார். ''செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?'' என்று கேட்டார் மதுரகவியார்.

''அத்தைத் தின்று அங்கே கிடக்கும்'' என்றார் ஆழ்வார் (இந்த விவரம் நம்மாழ்வார் சரிதத்தில் வருகிறது)

தனக்குத் தகுந்த விடை கிடைத்தவுடனே, நம்மாழ்வாரையே தன் குருவாக ஏற்றுக் கொண்டாடினார். பிறகு அவரருளைப் பெற்று, நம்மாழ்வார் அருளிச் செயல்களைப் பட்டோலையில் எழுதினர். மதுரகவியாழ்வாருக்கு நம்மாழ்வாரின் பாசுரங்களில் பற்று ஏற்பட்டது. மதுரகவியார் நம்மாழ்வாரையே பதினோரு பாசுரங்களால் ஆன பாமாலை ஒன்றால் பாடித்துதித்தார். அப் பாமாலையின் முதற்பா ''கண்ணிநுண்சிறுத்தாம்பு'' எனத்  தொடங்குவதால்  அதற்குக்  'கண்ணிநுண்சிறுத்தாம்பு'   என்பதே  பெயராயிற்று.

இவ்வாறு இருக்குங்காலை,  நம்மாழ்வாரிடமிருந்து பலவற்றையும் அறிந்துகொண்டு அவரையே துணைவராகக் கொண்டு அவருடைய புகழையே பாடி வந்தார். நம்மாழ்வார் திருநாடு அலங்கரித்த பின்னர், அவருடைய அர்ச்சை வடிவ உருவத்தைத் திருக்குருகூர் நகரில் எழுந்தருளச் செய்து போற்றி வந்தார்.

மதுரகவியார்,  நம்மாழ்வாருக்கு நித்திய நைமித்திக விழாக்களையெல்லாம் சிறப்புற நடத்தி வந்தார். அத்திரு விழாக்களில் வேதம் தமிழ் செய்த மாறன் வந்தார்;  திருமாலுக்குரிய தெய்வப் புலவர் வந்தார்;  அளவிலா ஞானத்து ஆசிரியர் வந்தார் என்பவை முதலாகப் பல விருதுகளைக் கூறித் திருச்சின்னம் முழங்கினார்.

இதனைக் கேள்வியுற்ற மதுரைச் சங்கத்தாரது மாணாக்கர்கள் எதிரில் வந்து, ''உங்கள் ஆழ்வார் பக்தரே அன்றி பகவானல்லரே. இவர் சங்கமேறிய புலவரோ? இவர் பாடிய திருவாய்மொழி சங்கமேறிய செய்யுளன்று. இவரை வேதம் தமிழ் செய்தவர் என்று புகழ்வதும் தகுமோ?'' என்று பலவாறு பேசி விருதுகளைத் தடுத்துரைத்தனர்.

அதற்கு மதுரகவிகள் மனம் பொறாமல் வருந்தி,  ''இவர்களின் கர்வம் பங்கமாகும்படி தேவரீர் செய்தருள வேண்டும்'' என்று நம்மாழ்வாரைத் துதித்தார்.

நம்மாழ்வாரும் ஒரு கிழப்  பார்ப்பனர் வடிவம் ஏந்தி வந்து,  திருவாய்மொழியில் 'கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணுந் திருநாமம் திண்ணம் நாரணமே' என்ற பாசுரத்தின் முதலடியை ஒரு சிற்றேட்டில் எழுதிக்கொண்டு சென்று,  சங்கப் பலகையின் மீது வைத்தால் அவர்கள் செருக்கு அடங்கும் என்று கூறியருளினார்.
அவ்வாறே மதுரகவியும் நம்மாழ்வாரின் கண்ணன் கழலிணை பாசுரத்தை எழுதிய ஏட்டை எடுத்துக்கொண்டு மதுரைச் சங்கம் போய்ச் சேர்ந்தார்.

அங்கு சங்கப் பலகையில் ஒரு முனையில் கண்ணன் கழலிணை பாசுரம் எழுதி வைத்த நறுக்கு ஓலை வைக்கப்பட்டது.  மறுமுனையில் புலவர்கள் ஏறி அமர்ந்தனர். அந்த அளவில், சங்கப் பலகையானது, பொற்றாமரைப் பொய்கையில் மூழ்கி, தன் மேலிருந்த புலவர்களையெல்லாம் நீரில் வீழ்த்தி, உடனே மேலெழுந்து தன்மீது வைத்த சிறு முறியை மாத்திரம் ஏந்திக் கொன்டு மிதந்தது.

அப்போது நீரில் விழுந்து தடுமாறி எழுந்து, மெல்ல நீந்திக் கரை சேர்ந்த சங்கப் புலவர்கள், வேதம், வேதத்தின் முடிவுப் பொருட்கள் முதலான யாவற்றையும் பிறரால் கற்பிக்கப்படாமல் தாமேயுணர்ந்த நம்மாழ்வாரது இறைமை எழில் பொருந்திய திறனைத் தெரிந்துகொண்டு செருக்கு அழிந்தனர்.  பிறகு மதுரகவியாழ்வாருடன் சேர்ந்து நம்மாழ்வாரின் விருது கூறல் முதலியவற்றை முன்னிலும் சிறப்பாக நடத்தி வந்தனர்.

தொடர்ந்து, மதுரகவியாழ்வார் தமது குருவாகிய நம்மாழ்வாருக்கு பலவகை விழாக்களையும் ஆராதனைகளையும் நடத்தி வந்ததோடு, ஆழ்வாரது அருந்தமிழ் மறைகளின் பொருட்களைப் பலரும் உணரும்படி உரைத்து சிலகாலம் எழுந்தருளியிருந்தார்.  சில காலத்துக்குப் பின்பு பேரின்பப் பெருவீட்டை அடைந்தார்.

மதுரகவிகளை ஆழ்வார்கள் வரிசையில் சேர்த்துக் கொள்வதற்கு முக்கியக் காரணம், அவர் நம்மாழ்வாரின் பிரதம சீடராக இருந்து திருவாய்மொழியை நெறிப்படுத்தினார் என்பதோடு, அதைப் பரப்பி ஒழுங்காகப் பாராயணம் செய்ய ஏற்பாடுகளும் செய்தார் என்பதனால்தான்!

மதுரகவிகளைக் காட்டிலும் நம்மாழ்வார் வயதில் சிறியவராக இருந்தாலும், அறிவிலும் தமிழிலும் கவித்துவத்திலும் பெரியவராகத் திகழ்ந்ததால் நம்மாழ்வாரையே குருவாகக் கொண்டார் மதுரகவி. அவருக்கு மற்ற தெய்வங்கள் எதுவும் தேவைப்படவில்லை.

பிரபந்தத்தில் இவர் எழுதிய பாடல்கள் மொத்தம் பதினொன்றுதான். அவை 'குருகூர் சடகோபன்' என்னும் நம்மாழ்வாரின் புகழை மட்டுமே கொண்டிருக்கின்றன. இருப்பினும் மதுரகவியாரே நம்மாழ்வாரைக் கண்டுபிடித்து பாடல்களை உலகுக்கு வெளிப்படுத்தியவர் என்கிற தகுதியில் அவர் வைணவ உலகால் கொண்டாடப்படுகிறார்.

-செங்கோட்டை ஸ்ரீராம்

காண்க:

மதுரகவி ஆழ்வார் (விக்கி)

மதுரகவி ஆழ்வார் - சிறுகுறிப்பு

கண்ணிநுண்சிறுத்தாம்பு

கண்ணிநுண்சிறுத்தாம்பு ௦ விளக்கவுரை (திராவிட வேதம்)

திருக்குருகூர் (தினமலர்)

மதுரகவி (தமிழ்முரசு)

மதுரகவி (தேசிகன்)

MADHURAKAVI AZHVAR

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக