நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

11.10.11

ஜனநாயகத்தை மீட்ட தபஸ்வி


ஜெயப்பிரகாஷ் நாராயணன் 
(பிறப்பு: 1902, அக். 11 -  மறைவு: 1979, அக். 8)

'லோக்நாயக்என்பரால் மக்கள் தலைவர் என்று பொருள் .  இவ்வாறு அழைக்கப்படும்  பெருமைக்குரியவர்பீகாரில் பிறந்த விடுதலை வீரரும்,   நெருக்கடியான நேரத்தில் இந்தியாவின்  ஜனநாயகத்தைக்  காத்தவருமான ஜெயப்பிரகாஷ் நாராயணன்.   

இந்தியாவில் 'சோஷலிசம்'  எனப்படும் சமதர்மக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளின் மூலவர் இவரே. 'முழுப் புரட்சி' என்ற சொல்லின்  பிதாவும் இவரே. வினோபா பாவே நடத்திய சர்வோதய இயக்கம் பரவலாக இவரது பணிகள் பெரும்பங்கு வகித்தன.

பிறப்பும் கல்வியும்:

பிகாரில் உள்ள சிதாப்தியரா என்ற கிராமத்தில் காயஸ்த ஜாதியைச் சார்ந்த  அரசு ஊழியர் ஒருவரது குடும்பத்தில்1902, அக். 11-ல் பிறந்தார்இவரது தாயின் பெயர் புல்ராணி தேவி. இவரது தந்தை ஹர்ஸ்தயாள் மாநில அரசு ஊழியராக இருந்ததால் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியவராக இருந்தார். எனவே ஜெயப்பிரகாஷ் தனது பாட்டியுடன் சென்று ஆரம்பக்கல்வி பயின்றார். உயர்நிலைக் கல்விக்கு பாட்னா சென்றார்.

படிப்பில் சுட்டியாக விளங்கிய ஜெயப்பிரகாஷ், அந்நாளிலேயே 'பீகாரில் தற்போது ஹிந்தியின்  நிலைமை' என்ற கட்டுரை எழுதி பரிசு பெற்றார். பிறகு கல்வி உதவித் தொகையுடன் பாட்னா கல்லூரியில் சேர்ந்தார். எனினும் விடுதலைப்போரில் ஆர்வம் கொண்டிருந்த அவரால் அங்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை. அந்தக் கல்லூரி ஆங்கிலேயர் நிதியுதவியால்  நடத்தப்பட்டது என்பதால், இரண்டாமாண்டு படித்தபோது அங்கிருந்து வெளியேறினார் ஜெயப்பிரகாஷ் அப்போதுதான், அங்கு தான் பாபு ராஜேந்திர பிரசாத்தின் (நமது நாட்டின் முதல் ஜனாதிபதி) தொடர்பு ஜெயப்பிரகாஷுக்கு ஏற்பட்டது. அவர் நடத்திவந்த பீகார் வித்யாபீடத்தில் ஜெயப்பிரகாஷ் இணைந்தார்.

ஜெயப்பிரகாஷுக்கு இயல்பிலேயே கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தது. எனினும் அவரது குடும்பப்பாரம்பரியம் காரணமாக மகாபாரதம், பகவத்கீதை ஆகியவற்றை சிறு வயதிலேயே படித்துவிட்டார். அந்தக்கால நவீன இளைஞர்கள் போலவே அவரும் மேலைநாட்டில் பரபரப்பை ஏற்படுத்திவந்த மார்க்ஸிசம் தத்துவம் மீது மோகம் கொண்டார். இந்த உலகின் அனைத்து செல்வ வளமும்  எல்லோருக்கும் பொதுவானது  என்ற கார்ல்மார்க்ஸின் முழக்கம் ஜெயப்பிரகாஷை கவர்ந்ததில் வியப்பில்லை. ஆயினும் அவர் காங்கிரஸ் கட்சியில் விருப்பம் கொண்டிருந்தார். மகாத்மா காந்தி இந்தியா அரசியலில் நுழைந்த சமயம் அது. அவரது அறைகூவலை ஏற்று நாடே ஒத்துழையாமை இயக்கத்தில் (1919) குதித்தது. ஜெயப்பிரகாஷும் விடுதலைப்போரில் தீவிரமாக ஈடுபட்டார். அடக்குமுறை சட்டமான ரௌலட்   சட்டத்தை எதிர்த்து நடந்த இந்தப்போராட்டம் நாட்டில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இதே காலகட்டத்தில் ஜெயப்பிரகாஷுக்கு திருமணம் நடந்தது. அவரது 18 -வது வயதில், பிரிஜ் கிஷோர் பிரசாத் என்பவரின் மகள் பிரபாவதியை மணந்தார். பிரிஜ் கிஷோர் காந்தீயவாதி. அவருக்கு காந்தியுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. இவர்களது மணவாழ்க்கை சிறிது காலமே நீடித்தது. 1922 -ல் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல ஜெயப்பிரகாஷ் முடிவெடுத்தார். அப்போது அவருடன் வெளிநாடு செல்ல மறுத்து, சபர்மதியிலுள்ள காந்தி ஆசிரமத்துக்கு சென்றுவிட்டார் பிரபாவதி. அங்கு கச்துரிபா காந்தியின் மகளாகவே அவர் உடன் வாழ்ந்தார்.

வெளிநாட்டுப் பயணமும் கம்யூனிச மோகமும்:

அமெரிக்கா சென்ற ஜெயப்பிரகாஷ் அங்கு பல சிறிய வேலைகள் செய்து  சம்பாதித்துக் கொண்டே மேற்படிப்பு படித்தார்.  ஹோட்டல் தொழிலாளியாகவும் கூட அவர் வேலை செய்திருக்கிறார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பில் சேர்ந்த ஜெயப்பிரகாஷ், சில நாட்களிலேயே தனக்கு ஆர்வமுள்ள துறை சமூகவியல் தான் என்பதைக் கண்டுகொண்டார். எனவே விஸ்கான்சின் பல்கலையில் சமூகவியல் பட்டப்படிப்பில் சேர்ந்தார். அப்போதுதான் அவருக்கு மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், டிராட்ஸ்கி, ரோசா லக்சம்பர்க் ஆகியோரது நூல்களைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியதுகாரல்மார்க்ஸின் 'மூலதனம்நோல்லின் மூன்று பெரும் பாகங்களையும் படித்த ஜெயப்பிரகாஷுக்கு ஏற்கனவே இருந்த இடதுசாரி நாட்டம் அதிகரித்தது. அமெரிக்காவில் ஏழு ஆண்டுகள் படித்து முடித்தபின், சோவியத் ரஷ்யாவில் முனைவர் படிப்பு படிக்க அவருக்கு அழைப்பு வந்தது. ஆனால் அவரது குடும்பச் சூழல் காரணமாக இந்தியா (1929) திரும்ப நேர்ந்தது.

நாடு திரும்பிய ஜெயப்பிரகாஷுக்கு அவரது மனைவி பிரபாவதியின் மனமாற்றம் அதிர்ச்சி அளித்தது. அவர் காந்தி ஆசிரமத்திலேயே துறவு வாழ்க்கை வாழா விரும்பியதை ஏற்றுக்கொண்டு குடும்ப வாழ்விலிருந்து ஒதுங்கினார் ஜெயப்பிரகாஷ். அவரது உள்ளம் முழுவதும் சோஷலிசக் கொள்கைகள் தீவிரமாகி இருந்த சமயம் அது. ஆயினும் கம்யூனிஸ்ட்கள் காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதை  அவரால் ஏற்க முடியவில்லை.

அந்தக் காலகட்டத்தில் கம்யூனிச இயக்கத்தை இந்தியாவில் கட்டி  எழுப்பிய எம்.என்.ராயின்  பல ஆக்கங்களை படித்த அவர்தேசிய நீரோட்டத்துடன்  இணைய  முடியாமல்  கம்யூனிஸ்ட்கள் ஒதுங்கி நிற்பதை விமர்சித்தார்.   விடுதலைப்போரில்  முன்னிற்கும்  காங்கிரஸ் கட்சியுடன் மோதும் கம்யூனிஸ்ட்களின் கொள்கைப்பற்றை அவர் கண்டித்தார். அதே சமயம் அலகாபாத்தில் இயங்கும் தொழிலாளர் ஆய்வு மையத்துக்கு தலைமை தாங்குமாறு தன்னை  ஜவகர்லால் நேரு அழைத்ததையும் அவரால் ஏற்க முடியவில்லை. வசதியான வாழ்விலோஆடம்பரங்களிலோ அவருக்கு சிறிதும் நாட்டமில்லை. எளிய மக்களின் வாழ்க்கைக்கு உதவக் கூடியதாக தனது வாழ்க்கை அமைய வேண்டும் என்பதில் மட்டும் ஜெயப்பிரகாஷ் பிடிவாதமாக இருந்தார்.  

விடுதலைப்போரில் அதிதீவிரம்:

காங்கிரஸ் கட்சியில் இருந்தபடியே சமதர்ம சமுதாயம் குறித்தும் சிந்தித்துவந்த ஜெயப்பிரகாஷுக்கு கம்யூனிஸ்ட்கள் விடுதலைப்போரில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பப்ட வேண்டும் என்பதே ஆசையாக இருந்தது, ஆனால் காலம் அதற்கு முரணாக இருந்தது. இந்த இடைக்காலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் செயல்வேகம் மிகுந்த தலைவராக ஜெயப்பிரகாஷ் உருவெடுத்தார். 1932 -ல் தனது தலைமைப்பண்பை அவர் வெளிப்படுத்த அறிய வாய்ப்பு கிடைத்தது.

அந்த ஆண்டு காங்கிரஸ் அறிவித்த சட்டமறுப்பு இயக்கம் அரசை சீண்டுவதாக இருந்தது. அதையடுத்து காந்தி, நேரு உள்ளிட்ட பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். அப்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பில் இருந்த ஜெயப்பிரகாஷ் தலைமறைவாக இருந்தபப்டி விடுதலை இயக்கத்தை வழிநடத்தினார். முக்கியத் தலைவர்கள் அனைவரும் கைதான நிலையிலும் சட்ட மறுப்பு இயக்கம் தொடர்வதன் காரணம் என்ன என்று ஆராய்ந்த அரசு, இறுதியில் 'காங்கிரஸ் போராட்டத்தின் மூளை' ஜெயப்பிரகாஷ் என்று கண்டறிந்துசென்னையில்  இருந்த அவரை அதே ஆண்டு செப்டம்பரில் கைது செய்தது. அவர் நாசிக் சிறையில் அடைக்கப்பட்டார்.

நாசிக் சிறைவாசம்  தான் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் வாழ்க்கையில் பெரும் திருப்பம் ஏற்படுத்திய நிகழ்வாகும். அமெரிக்கா சென்று படித்தபோது இடதுசாரி சிந்தனைக்கு ஆளானது போலவே, நாசிக் சிறையில் உடனிருந்த தோழர்களுடனான விவாதம் காரணமாக இந்திய அரசியலில் ஒரு புதிய பாதையை உருவாக்க வாய்ப்பு ஏற்பட்டது.

நாசிக் சிறையில் இருந்த ராம் மனோகர் லோகியா, அசோக் மேத்தாமினு மசானிஅச்யுத் பட்வர்த்தன்யூசுப் தேசாய்  போன்ற சக சிறைவாசிகளுடன்  வாத பிரதிவாதங்களில் ஈடுபட்ட ஜெயப்பிரகாஷுக்கு சோஷலிசம் மட்டுமே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் என்ற உறுதியான நம்பிக்கை ஏற்பட்டது. சிறையிலிருந்து தோழர்கள் விடுதலை ஆனவுடன், ஒத்த சிந்தனையுள்ள தலைவர்கள் ஒருங்கிணைந்து (1934) காங்கிரஸ் சோஷலிச கட்சியை நிறுவினர். அதன் தலைவராக ஆச்சார்யா நரேதிரதேவும், செயலாளராக ஜெயப்பிரகாஷும் தேர்வு செய்யப்பட்டனர்காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சோஷலிசம் கொள்கையுடன் தனித்து இயங்கும் ஒரு குழுவாக அக்கட்சி செயல்பட்டது. எனினும் இக்கட்சி, தேர்தல் அரசியலுக்கு ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

சமதர்மக் கொள்கை கொண்ட கம்யூனிஸ்ட்களையும் தேசிய இயக்கமான காங்கிரசையும் இணைக்கும் முயற்சியில் தோல்வி கண்டாலும், இரு இயக்கங்களின் அடிப்படையான சமதர்ம சமுதாயம், விடுதலைப்போராட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கட்சியை அமைக்க ஜெயப்பிரகாஷால் இயன்றது. இக்கட்சியின் அரசியல் தாக்கம் இன்றளவும் பேரிடம் வகிப்பது கண்கூடு.

புரட்சியாளராக மாற்றம்:

இரண்டாம் உலகப்போர் வெடித்தபோது (1939) காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து பேதங்கள் ஏற்பட்டன. போரில் ஈடுபடும்  ஆங்கிலேயருக்கு ஆதரவாக இந்தியப் படைகள் செல்ல வேண்டுமா, வேண்டாமா என்பதில் மோதல்  ஏற்பட்டது. இந்த இக்கட்டான சமயத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஆங்கிலேய அரசுக்கு எதிராகச் செயல்ப்பட வேண்டும் என்பதே ஜெயப்பிரகாஷின்  எண்ணம். காங்கிரஸ் சோஷலிச கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில், ஆங்கிய அரசின் சுரண்டலுக்கு எதிராக வேலை நிறுத்தத்துக்கு அவர் அறைகூவல் விடுத்தார். போருக்கு ஆயத்தமாகும் ஆங்கிலேயப் படைக்கு இந்தியர்கள் உதவாது போனால் அவர்கள் வேறு வழியின்றி நம் நாட்டை விட்டு தாமாகவே வெளியேறும் நிலை ஏற்படும் என்பதே ஜெயப்பிரகாஷின் கருத்து. ஆனால் காந்தியின் கருத்து வேறாக இருந்தது. எனினும் காந்தி ஜெயப்பிரகாஷை மதித்தார்.

இந்நிலையில்ஆங்கிலேய அரசால் ஜெயப்பிரகாஷ் கைது செய்யப்பட்டார். இந்த நேரத்தில் தான் காந்தி- நேதாஜி மோதல் முற்றி நேதாஜி காங்கிரசிலிருந்து வெளியேறி இருந்தார். 9  மாத சிறைவாசத்துக்குப் பின்னர், சிறையிலிருந்து மீண்ட ஜெயப்பிரகாஷ் இவ்விருவரிடையே இணக்கம் ஏற்படுத்த முயன்றார். ஆனால், பலன் கிட்டவில்லைஅதன்பிறகு (1942) வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை காந்தி துவக்கினார். நேதாஜி காங்கிரசிலிருந்து முற்றிலும் வெளியேறி தனி புரட்சிப்பாதை அமைத்தது தனி வரலாறு.

இதனிடையே ஜெயப்பிரகாஷ் கைது செய்யப்பட்டு மும்பை, ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு தில்லி சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு ஆயுதப்போராட்டத்துக்கு அறைகூவல் விடுக்கும் கடிதங்களுடன் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஆயுதப்போருக்கு மக்களைத் தூண்டுவதாக குற்றம் சுமத்தப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த மகாத்மா காந்தி, ''ஆயுதப்போருக்கு இந்தியா தலைவர் ஒருவர் ஆயத்தமாகிறார் என்றால், அதற்கு ஆங்கிலேய அரசின் கீழ்த்தரமான அடக்குமுறை  ஆட்சியே காரணம்'' என்றார்.

பிறகு காந்தி அறிவித்த 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் காங்கிரஸ் சோஷலிசக் கட்சி பெரும்பங்கு வகித்தது. ஹசாரிபாக் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன், அங்கிருந்து 5  தோழர்களுடன் சிறைச்சுவரை சுரண்டி ஓட்டையிட்டுத் தப்பினார். அது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு நேபாளம் சென்ற ஜெயப்பிரகாஷர், 'ஆசாத் தாஸ்தா' எனப்படும் விடுதைப்படையைத் திரட்ட முயன்றார். எனினும் ரயிலில் பஞ்சாப் செல்லும்போது 1943, செப்டம்பரில் மீண்டும் கைது செய்யப்பட்டார். டிசம்பரில் இவர் அதிமுக்கியமான அரசாங்கக்  கைதி என்று அறிவிக்கப்பட்டார். லாகூர் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயப்பிரகாஷரை ஆங்கிலேய அரசு கடுமையான சித்ரவதைக்கு உட்படுத்தியது.  அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுப்பெற்று வந்தது. இதன் விளைவாக 1945, ஜனவரியில்  - ல் 16  மாதங்கள் கழிந்த நிலையில் ஜெயப்பிரகாஷர் ஆக்ரா சிறைக்கு மாற்றப்பட்டார்.

விடுதலைப்போரின் இறுதி கட்டத்தில் நாடே கொந்தளித்திருந்த காலம் அது. அரசுடன் பேச்சு நடத்த வேண்டுமானால் சிறையிலுள்ள ராம் மனோகர் லோகியாவையும் ஜெயப்பிரகாஷரையும் அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி நிபந்தனையிட்டார். அதன்படி இருவரும் 1946, ஏப்ரலில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களது விடுதலையை நாடே கொண்டாடியது. 'இந்திய  இளைஞர் இதயங்களின் மன்னன்' என்று ஜெயப்பிரகாஷ் புகழப்பட்டார்.

கட்டமைப்புப் பணியில் ஈடுபாடு:

அதன்பிறகு காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த சுயநலமிகளால் சோஷலிச கட்சியினர் புறக்கணிக்கப்பட்டனர். தேசப்பிரிவினை கட்டாயமானது என்றே சோஷலிசக் கட்சியினர் கருதினர். இதுபோன்ற கருத்து வேற்றுமைகளால் காங்கிரஸ் தலைமையிலான விடுதலைபோரட்ட மைய நீரோட்டத்திலிருந்து காங்கிரஸ் சோஷலிசக் கட்சியினர் விலகினர். பிற்பாடு தேசம் பிரிவினை செய்யப்பட்டபோது (1947)  நிகழ்ந்த சோகங்கள் சோஷலிசக் கட்சியினரையே அதிரவைத்தன.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, ஆட்சி அதிகாரத்தில் நாட்டமில்லாத சோஷலிஷ கட்சியினர் தனியே எதிர்க்கட்சியாக இயங்கினர். அவர்கள் ஒருங்கிணைத்து 'பிரஜா சோஷலிஸ்ட்கட்சியைத் துவக்கினர். காந்தியின் மறைவுக்குப் பின் ஜவஹர்லால் நேரு முன்னெடுத்த தொழில்மயமாக்க  அடிப்படையிலான சோஷலிசக் கனவினை  ஜெயப்பிரகாஷால் ஏற்க முடியவில்லை. சுதந்திர இந்தியாவில் நேரு தலைமயிலான காங்கிரஸ் கட்சிக்கு கடிவாளமாக சோஷலிஸ்ட்கள் செயல்பட்டனர்.

1954 -ல் ஆச்சார்யா வினோபா பாவே துவங்கிய சர்வோதய இயக்கத்துக்கும் பூதான  இயக்கத்துக்கும்  ஆதரவளிப்பதாக அறிவித்த ஜெயப்பிரகாஷர்ஹசாரிபாகில் அதற்கென ஓர்  ஆசிரமத்தை நிறுவினார்கிராமங்களை  முன்னேற்றுவதே  தனது நோக்கம் என்று அவர் அறிவித்தார்இந்நிலையில், பிரஜா சோஷலிஸ்ட் கட்சியுடன்  சித்தாந்தம் தொடர்பான  கருத்து வேறுபாடுகளால் 1957 -ல்   அக்கட்சியிலிருந்து ஜெயப்பிரகாஷர் விலகினார். அதன்பிறகு நேரடி  அரசியலில் ஆர்வம் குறைந்த அவர் சர்வோதயப் பணிகளில் ஈடுபட்டார்.

1964 -ல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி தொடர்பாக இவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் எழுதிய கட்டுரை அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியபோதும் தனது கருத்தை அவர் மாற்றிக்கொள்ளவில்லை.

முழுப்புரட்சியும் நெருக்கடி நிலையும்:

1970 -களில் பிகாரில் தீவிர அரசியலுக்கு ஜெயப்பிரகாஷர் மீண்டும் திரும்பினார். அம்மாநிலத்தில் நிலவிய ஊழலுக்கு எதிராகவும், மக்களின் அடிப்படை உரிமைகளைக் காக்கவும் தார்க்குண்டே உடன் இணைந்து முழுப் புரட்சி இயக்கத்தைத் துவக்கினார். இந்த இயக்கம் மாணவர்களின் போராட்டமாக உருவெடுத்து இந்திய அரசியலில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இன்றுள்ள பிரதானமான அரசியல் தலைவர்கள் பலர் (முலாயம் சிங்,  லாலு, நரேந்திர மோடி உள்பட பலர்)  அந்தக் காலத்ததில் வார்க்கப்பட்டவர்களே.

முழுப்புரட்சி இயக்கத்துக்காக  ஜனநாயகம் வேண்டும் குடிமக்கள்  (1974), மக்கள் குடியுரிமைகளுக்கான  மக்கள் கூட்டமைப்பு (1976) என்ற அரசு சாரா அமைப்புகளை தோற்றுவித்தார். அதே காலகட்டத்தில், தனது பதவிக்கு வந்த ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள நெருக்கடி நிலை அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் நாட்டின் (25.06.1975) மீது ஏவப்பட்டது. பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்ட நிலையில், ஜெயப்பிரகாஷரும் கைதானார். சண்டிகார் சிறையில் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்ட அவர் சிறுநீரக பாதிப்புக்கு ஆளானார். நாடு முழுவதும் கொந்தளித்த  நிலையில், அதே ஆண்டு நவம்பரில் ஜெயப்பிரகாஷர் விடுதலை ஆனார்.

நெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டம் குறித்து மட்டுமே தனி ஒரு அத்தியாயம் எழுதப்பட வேண்டும். நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுவதில் ஜெயப்பிரகாஷரின் பங்கு அளப்பரியது. பல்வேறு சித்தாந்த வேறுபாடுகள் கொண்ட பிரஜா சோஷலிஸ்ட், லோக்தளம், பழைய காங்கிரசம் சுதந்திரா, பாரதீய ஜனசங்கம் உள்ளிட்ட இடத்சாரிகள் அல்லாத கட்சிகள இந்திரா காந்தியின் அடுக்குமோரை ஆட்சிக்கு எதிராக ஒன்றுபடுத்தினார் ஜெயப்பிரகாஷர். அதன் விளைவாக ஜனதா கட்சி மலர்ந்தது. நெருக்கடி நிலைக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்திய தலைமறைவுப் போராட்டமும் ஜெயப்பிரகாஷர் ஆசியுடன் நடைபெற்றது.

நெருக்கடி நிலைக்கு எதிரான மக்கள் போராட்டங்கள், உலக நாடுகளின் எதிர்ப்புகளால் மிரண்ட இந்திரா காந்தி தேர்தல் நடத்துவதாக அறிவித்தார். அந்தத் தேர்தல் தான் ஜனநாயகத்தை நாட்டுக்கு மீட்டுத் தந்த தேர்தல். நெருக்கடி நிலைக் காலத்திலேயே எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்திய ஜெயப்பிரகாஷர் இந்திரா காந்தியின் அடக்குமுறை அரசியலுக்கு சவாலானார். இந்தத் தேர்தலில் ஜெயப்பிரகாஷர் வகுத்த வியூகம் வென்றது. இந்திரா காந்தி தோல்வியுற்றார்; ஜனநாயகம் மீட்கப்பட்டது; ஜனதா கட்சியின் மொரார்ஜி தேசாய் பிரதமர் (24.03.1977) ஆனார். அதன் பிறகு ஜனதா கட்சிக்குள் நிலவிய குழப்பங்கள் ஜெயப்பிரகாஷருக்கு மனவேதனை அளித்தன. அவரது உடல்நலமும் குன்றிவந்தது.

ஆட்சியை மாற்றியபோதும் பதவியை நாடாத அந்த உத்தமர், வாழ்நாள் முழுவதும் எளிய மக்களின் வாழ்க்கை முன்னேறுவது குறித்து சிந்தித்த அந்த தவயோகி,  தனது  ஒப்பற்ற தலைமையால் இந்திய ஜனநாயகத்தை மீட்ட அந்த மாவீரர், நாட்டுநலனே  உயிர்மூச்செனக் கொண்ட  அந்த லோக்நாயகர்  உடல்நலக்குறைவால் 1979, அக். 8-ல் மண்ணுலகை விட்டு மறைந்தார். அவருக்கு பாரத நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' 1998 -ல் வழகப்பட்டது.

ஜெயப்பிரகாஷ் நாராயணன் 'இந்திய  மனங்களின் மனசாட்சி' என்று வர்ணிக்கப்படுகிறார். அவர் ஒருபோதும் அதிகார அரசியலை நாடவில்லை. 1977-ல் அதிகாரவர்க்கமே அவர் முன் மண்டியிட்டபோதும் அவர் ஒரு சித்தராக, தபஸ்வியாக வாழ்ந்து மறைந்தார். அவரது வாழ்க்கை நமக்கு என்றும் வற்றாத ஆற்றலை வழங்கும் ஜீவநதியாகும்.   நாட்டில் ஊழல் மலிந்த இன்றைய சூழலில் ஜே.பி. குறித்த நினைவுகளே நமக்கு ஒரே நம்பிக்கையூற்றாகும்.

-குழலேந்தி

காண்க:









.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக