நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

6.7.12

உலகளந்தான்

ஆசாரிய வினோபா பாவே
(1895, செப். 11 - 1982, நவ. 15)
தம்மைக் காட்டிலும் காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக் கொண்டவர் என்று காந்தி இவரை பற்றி கூறியுள்ளார். அவரது வாழ்நாளில் 13 வருடங்களில் 34,000 கி,மீ.க்கு மேல் கால்நடையாக, கிராமம் கிராமமாக இந்திய நிலபரப்பு முழுவதும் நடந்தே கடந்தவர் .புரட்சிகரமான பூதான இயக்கத்தை தொடங்கி வழிநடத்தியவர்.சர்வோதயா இயக்கத்தின் ஆணி வேர்களில் ஒருவர். அவர் ஆச்சர்யா வினோபா பாவே.

1951 ஆம் ஆண்டில் சர்வோதயாவின் மாநாடு ஆந்திரத்தில் உள்ள சிவராம்பள்ளியில் நடந்தது. தனது வார்தா ஆசிரமத்திலிருந்து நடந்தே அங்கு வந்து சேர்கிறார். அப்பொழுது தெலுங்கானா பகுதியில் நக்சல் இயக்கத்தினர் பெறும் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். வன்முறையை பிரயோகித்து வறியவர்களிடத்திலிருந்து நிலங்களை பிடுங்கி எளியவர்களுக்கு வழங்கினர்.அவர்களது வன்முறையை ஒடுக்க அரசு காவல் துறையை அனுப்பியது. கிராமங்கள் பகலில் போலீஸ் பிடியிலும் இரவில் நக்சல் பிடியிலும் சிக்கி சிதைந்து கொண்டிருந்தன.

சுமார் இருநூறு கிராமங்கள் முழுமையாக நக்சல்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. அரசு தனது பலத்தை பிரயோகித்து ஓரளவு வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றது, ஆனால் அங்கு நிலவிய அடிப்படை பிரச்னை தீர்ந்தபாடில்லை. மாநாடு முடிந்தது, வினோபா பதட்டத்துக்குரிய அப்பகுதிக்குள் பயணிக்க திட்டமிடுகிறார். சிறையில் உள்ள நக்சல் இயக்க தலைவர்களை சந்திக்க அனுமதி கோரி,  ராம நவமியன்று அவர்களை சந்தித்து பேசுகிறார். வினோபாவிடம் எந்தத் திட்டமும் இல்லை, ஆனால் மக்களோடு மக்களாக கலந்து நடந்து கீதை சொல்லும் செய்தியை எடுத்து செல்ல வேண்டும் என்ற ஒரே உள்ளுணர்வு அவரிடத்தில் இருக்கிறது. எதைப் பற்றியும் அவர் கவலைப்படவில்லை.

வினோபா அவரது குழுவோடு  ஏப்ரல் 18 அன்று போச்சம்பள்ளி எனும் கிராமத்தை அடைகிறார். அங்கு மக்களை சந்தித்து உரையாடும் பொழுது, அந்த ஊரில் வாழும் நிலமற்ற ஏழை அரிஜன மக்கள் வினோபாவிடம் தங்களுக்கு நாற்பது ஏக்கர் நஞ்சை நாற்பது ஏக்கர் புஞ்சை நிலம் வேண்டும், நக்சல்கள் கொடுக்கவேண்டாம், அரசிடம் கேட்டு வாங்கி கொடுங்கள் என்று முறையிடுகிறார்கள். வினோபா கிராம மக்களின் கூட்டத்தில் உரையாற்றுகிறார்,  இந்த பிரச்னைக்கு என்ன செய்வது ? எப்படி இதை தகர்ப்பது என்று கேள்வி எழுப்பினார்.  ஒருக்கால் அரசு நிலம் ஏற்பாடு செய்யவில்லை என்றால்,கிராமத்தினரே அவர்களுக்குள் எதுவும் செய்துகொள்ள முடியுமா என்று கேட்கிறார். பிரச்னைகளுக்கு தீர்வு எட்டப்படவில்லை, தான் சர்ச்சைக்குரிய பகுதிகளில் பயணம் மேற்கொள்வதால் ஒருவேளை இதுவே கடைசி சந்திப்பாக இருக்கக்கூடும் என்றார்.

அப்பொழுது அந்த கூட்டத்தில் அமர்ந்து இருந்த அதே கிராமத்தை சேர்ந்த ராமசந்திர ரெட்டி எழுந்தார்  "நான் அவர்களுக்கு எனது நிலம் 100 ஏக்கரை கொடுக்கிறேன் " என்றார். மீண்டும் மாலை நடந்த பிரார்த்தனை கூட்டத்திலும் உணர்ச்சி மிகுதியோடு அதையே கூறினார்,  இது யாரும் எதிர்பாராதது.  அஹிம்சையின் வழியில் அன்பின் வலிமை கொண்டு இந்தப் பிரச்னையை தீர்க்க முடியும் என்று வினோபா நம்பினார். நிலத்திற்காக ரத்தம் சிந்தி கொண்டிருக்கும் நிலபரப்பில் மனமுவந்து ஒருவர் நிலத்தை தானமாக கொடுப்பது மிகப் பெரிய செயலாகும்.  நிலத்தை பெற்றவர்களோ எங்களுக்கு என்பது ஏக்கர் போதுமானது அதை காட்டிலும் ஒரு ஏக்கர் கூட கூடுதலாக தேவையில்லை என்று உறுதியாக நின்றனர். இது மற்றுமொரு ஆச்சரியம். இது இறைவனின் திட்டமாக, ஓர் சமிக்ஞையாக உணர்ந்தார். எல்லாம் துலக்கம் பெற்றது. அங்கிருந்து தொடங்கியது தான் பூதான இயக்கம் .

வினோபாவும் அவரது சகாக்களும் அதிகாலை மூன்று மணிக்கு எழுவர். அவரது குழுவில் -  லட்சியவாதிகள்,  இளைஞர்கள், வெளிநாட்டு ஆர்வலர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் பொதுவாக இருப்பார்கள். காலை எழுந்து அவர்களுக்குள் ஓர் சிறிய பிரார்த்தனை கூட்டம் நடத்தி முடித்துவிட்டு நடக்க தொடங்குவார்கள். நாளுக்கு பனிரெண்டு மைல் கணக்கு. ஒவ்வொரு கிராமத்திலும் திரளாக மக்கள் வரவேற்றனர்,  உணவும் இருப்பிடமும் கொடுத்து உபசரித்தனர். வினோபா மக்களிடம் பூமிதானத்தின் முக்கியத்துவத்தை பற்றி ஊர் மக்களுக்கு உரை நிகழ்த்துவார். அவரது தொண்டர்கள் அங்கு கிராமத்தினரை சந்தித்து நிலங்களை பெற்று வந்தனர். தெலுங்கானா  முழுவதும் நடந்தார், மக்கள் சாரை சாரையாக திரண்டு நிலங்களை வழங்க முன்வந்தனர். உள்ளார்ந்த கருணையின் ஒரு சிறு தீப்பொறி இந்தியா முழுவதும் பற்றிக்கொண்டது.

நிலகிழார்களிடத்திலும் விவசாயிகளிடத்திலும், "நான் தங்களது கடைசி மகன், எனது பங்கு நிலங்களை பிரித்து தாருங்கள்" என்று போகுமிடமெல்லாம் கோரிக்கைகள் வைத்தார். இந்தியாவில் நிலமற்று வாழும் விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய ஐம்பது மில்லியன் ஏக்கர் நிலங்கள் வேண்டும் என்று கணக்கிட்டார். அதற்கான முயற்சிகளில் இறங்கினார். ஆனால் அவரால் ஒரு பனிரெண்டு வருட காலத்தில் இந்தியா முழுவதும் நான்கு மில்லியன் ஏக்கர் நிலத்தை மட்டுமே பூதான் இயக்கம் மூலம் பெற்றளிக்க முடிந்தது. ஆயினும் கூட இது ஓர் மகத்தான சாதனை தான்.

விநாயக் என்ற இயற்பெயருடைய வினோபா 1895 ம் ஆண்டு, செப்டம்பர் 11 அன்று மகாராஷ்டிரத்தின் கொலோபா மாவட்டத்திலுள்ள ககோடா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். அவரது தாயார் ருக்மிணி தேவி, அவரது சகோதரர் பாலகோபா சிவாஜி ஆகியவர்கள் வினாயக்கை வெகுவாக பாதித்தனர். அவரது சகோதரர் துறவு பூண்டு வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாக மக்களுக்கு தொண்டாற்றினார்.

தனது இளம் வயதிலேயே வினோபாவிற்கு அபாரமான ஆன்மீக முதிர்ச்சி சாத்தியமானது. இன்டர்மீடியட் பரீட்சைக்கு மும்பைக்கு செல்வதாக இருந்த அவர் அதை கைவிட்டு வாரணாசி புறப்படுகிறார். அங்கு சமஸ்க்ருத பாடங்களை ஊன்றி கற்று தேறுகிறார். அப்பொழுது பனராஸ் இந்து பல்கலைகழகத்தில் காந்தி உரையாற்றுகிறார், அதன்பால் ஈர்க்கப்பட்டு அவருக்கு கடிதங்கள் எழுதுகிறார். காந்தி அவரை தனது அகமதாபாத் ஆசிரமத்திற்கு சந்திக்க அழைக்கிறார்.

அவரது மனதில் ஆன்மீக தேடலுக்காக இமயத்திற்கு செல்வதா அல்லது சுதந்திர புரட்சி பற்றி எரிகிற வங்காளத்துக்கு செல்வதா என்று பெறும் குழப்பம் ஏற்பட்டது.  ஜூன் 1916 ல் காந்தியை சந்திக்கிறார் வினோபா,  அவரது அக கொந்தளிப்புகள் முடிவுக்கு வருகின்றன, பிற்காலத்தில் அந்த சந்திப்பை பற்றி சொல்லும் பொழுது "நான் காசியில் இருந்த காலத்தில் இமயத்திற்கு செல்வதே எனது லட்சியமாக இருந்தது, அதே சமயம் வங்காளம் செல்ல வேண்டும் என்று ஆத்மார்த்தமாக வேண்டினேன், எனது இந்த இரண்டு ஆசையும் நிராசையாகின, விதி என்னை காந்தியிடத்தில் இட்டுச் சென்றது, காந்தியிடம் நான் இமயத்தின் பேரமைதியை மட்டும் உணரவில்லை வங்காளத்தின் புரட்சியின் கனப்பையும் உணர்ந்தேன்".

வினோபா மூன்று விதமான மனிதர்களை தெலுங்கானாவில் சந்தித்ததாக எழுதுகிறார், எளிய பொதுமக்கள்,  ஊரிலிருந்து துரத்தப்பட்ட பெறும் செல்வந்தர்கள்,  மற்றும் கம்யுனிஸ்டுகள். இந்த மூன்று தரப்பினரிடத்திலும் வினோபா தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருந்தார் .கம்யுனிஸ்டுகளிடம் -  "உங்களது நோக்கம் எத்தனை உயர்வாக இருந்தாலும், உங்கள் சித்தாதம் முன்வைக்கும் லட்சிய சமூகத்தை இதுவரை எந்த தேசமும் உருவாக்க முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும், அதுவும் அதற்கு வன்முறை வழியில்லை, அதுவும் தற்பொழுது தான் இந்தியா சுதந்திரம் அடைந்துள்ளது,இந்த நேரத்தில் வன்முறை பிரயோகிப்பது நிச்சயம் தவறாகும் " என்றார். இவ்விளக்கம் அவர்களை திருப்தி படுத்தியது என்றே சொல்ல வேண்டும். அதே போல் தலைமறைவு வாழ்க்கை வாழும் நிலக்கிழார்களை சந்தித்து துணிவுடன் ஊருக்கு சென்று ஏழை மக்களுக்கு சேவை செய்யுமாறு அறிவுறுத்தினார்.  ஒளிந்து வாழ்வதை காட்டிலும் மரணம் மேலானது என்றார்.

பூதானம் ஓர் வேள்வி என்றார் அவர். மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகம், தமிழகம் என்று தொடர்ந்து பயணித்தார் வினோபா. முதல் ஏழு வருடங்கள், அதாவது 57 வரை வெகு முனைப்பாக இந்த பூதான இயக்கம் செயல்பட்டது. பூதானத்தின் அடுத்த பரிணாமம் கிராம தான திட்டம். மே 1952 ல் உத்தரப் பிரதேசத்தில் பயணிக்கும் பொழுது மன்க்ராத் எனும் ஒட்டுமொத்த கிராமமே தானமாக கொடுத்தனர். தங்களது தனி சொத்தான நிலங்களை கிராம பொது சபைக்கு மக்கள் எழுதி கொடுத்தனர். இதுவும் ஓர் மிகப் பெரிய லட்சிய கனவாகும்.

தனி நபர் பூமி தானத்தை காட்டிலும் ஊரே இயைந்து வாழும் கிராம்தான திட்டம் சிறப்பானதாகும். இந்தியா முழுவதும் அப்படி சுமார் ஒரு லட்சத்தி அறுபதாயிரம் கிராமங்கள் கிராம தான இயக்கத்திற்கு கீழ் வந்தன.  அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த கிராமங்களில் மூன்றில் ஒரு பங்கு. இந்திய அரசு கொண்டு வந்த நில உச்சவரம்பு சட்டத்தைக் காட்டிலும் பூதான இயக்கம் செறிவாக செயல்பட்டது அப்பட்டமான உண்மை. அரை மில்லியன் குடும்பங்களேனும் இதில் பயன்பெற்றது என்று ஓர் கணக்கெடுப்பு சொல்கிறது.

காந்தியின் தீவிரமான சீடராக திகழ்ந்தார். அவருக்கும் இவருக்குமான உறவு இருவரும் வாழும் வரை சீராகவே இருந்தது. 1923 ல் நாக்பூரில் சத்யாக்ரகம் செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் காந்தி அவரை வைக்கம் போராட்டத்திற்கு அனுப்பினார். பின் மீண்டும் 1932 ல் சிறைவாசம். 1940 ல் காந்தி வினோபாவை முதல் தனிமனித சத்யாக்ராகியாக தேர்ந்தெடுத்தார். கிராமீய பொருளாதாரம் மற்றும் காதியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர் என்று காந்தியால் பாராட்டப் பெற்றவர். பின்னர் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார்.

கீதை காட்டும் பாதையில் வாழ்ந்தார் வினோபா. தங்கத்தை துறந்து வாழ ஓர் இயக்கத்தை தொடங்கினார், அதே போல் பண்டைய காலத்து ரிஷிகள் போல் எருதுகளை பயன்படுத்தாமல் உழும் முறையை பிரபலபடுத்தினார்,  ஸ்ரமதானம்- பொது வேலையில் பங்கெடுப்பது,  சாந்தி சேனை, ஜீவ தானம் - தனது உயிரையே உயர்ந்த லட்சியத்திற்காக கொடுக்கத்  துணிவது போன்றவை அவர் தொடங்கிய முன்னோடி இயக்கங்கள்.

லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் விநோபாவால் ஈர்க்கப்பட்டு ஜீவ தானம் செய்துகொண்டார். இத்தனையும் சாதித்தவர் அறுபது வயதை நெருங்கி கொண்டிருந்த வயிற்றுப்  புண், வயிற்றுப்  போக்கு மலேரியா போன்ற நோய்களால் நீண்டகாலமாக வாதனையில் உழன்ற எளிய மனிதர் . அவரது வயிற்றுப்  புண்ணின் காரணமாக அவரது உணவே தேன், தயிர், மற்றும் பால் ஆகியவை மட்டும் தான்.

பூதான இயக்கம் உலகமெங்கும் கவனம் பெற்றது, அமெரிக்காவின் லூயிஸ் பிஷர் ,"அண்மைய காலத்தில் கிழக்கிலிருந்து நமக்கு கிடைத்த மிக சிறந்த படைப்பூக்கம் மிக்க திட்டங்களில் ஒன்று கிராம தானம்" என்றார். ஹல்லாம் டென்னிசன், பிரபல ஆங்கில கவிஞர் ஆல்பிரெட் டென்னிசன் அவர்களின் பெயரன், வினோபாவுடன் தான் இந்திய கிராமங்களுக்கு ஊடாக பயணித்ததை 'தி செயின்ட் ஆன்  தி மார்ச்' எனும் பெயரில் புத்தகமாக வெளியிட்டார். இந்தியாவின் பூதான இயக்கம் கம்யூனிசத்திற்கு சிறந்த மாற்று என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செஸ்டர் போவ்லேஸ் அவரது புத்தகத்தில் குறிப்பிடுகிறார். பிரித்தானிய தொழிலதிபர் ஈர்நெஸ்ட் பார்டர் பூதான இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, காந்திய அரங்காவல முறையை ஏற்றுக்கொண்டு தனது நிறுவனத்தின் தொண்ணூறு பங்கு லாபத்தை தொழிற்சாலை தொழிலாளிகளுக்கு கொடுத்தார். 'டைம்' பத்திரிக்கை அட்டையில் வினோபா படத்தை போட்டு கௌரவித்தது .

சம்பல் பள்ளத்தாக்கில் பதுங்கி கொள்ளையடிக்கும் ஒரு கும்பல் ஆயுதங்களை துறந்து அவரிடம் சரணடைந்தது.உண்மையில் இது அஹிம்சையின் மாபெரும் வெற்றி. வாழ்க்கை முழுவதும் பயணித்தார், பல ஆயிரம் மேடைகளில் உரையாற்றினார்,  பதிமூன்று வருட சுற்று பயணங்களை முடித்துக்கொண்டு மீண்டும் ஊர் திரும்பினார். பின்னர் ஒரு நான்கு வருடம் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அதன் பின்பு பசுவதைக்கு எதிராக ஓர் இயக்கத்தை முன்னெடுத்தார். 74-75 வரை அவரது பௌனர் ஆசிரமத்தில் மௌன விரதத்தில் ஆழ்ந்தார். மெல்ல தனது வெளியுலக தொடர்புகளைத் துண்டித்துக் கொள்ளத் துவங்கினார். அவரது ஆன்மீக பசி அவரை ஆட்க்கொண்டது.

பூதான இயக்கம் மற்றும் வினோபாவின் மேல் பல குற்றசாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. கிராமதான இயக்கத்தில் அனேக கிராமங்கள் உறுதிமொழியில் எளிதாக கையெழுத்து இட்டனர்; ஆனால் நடைமுறையில் அத்தனை கிராமங்களும் அப்படி மாறிவிடவில்லை. 70 களில் வெகு சில ஆயிரம் சிறிய கிராமங்களே நிலத்தை கிராமசபைக்கு ஒப்படைத்தது. அதுவும் அநேகமாக ஓர் இனக்குழுவாக, ஒரே சாதியாக வாழ்ந்து வந்த கிராமத்தினரே அப்படி செய்தனர். நாலு லட்சம் ஏக்கர் நிலம் தானமாக அளிக்கப்பட்டாலும் சுமார் ஒன்றே முக்கால் லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே உரியவர்களை சென்றடைந்தது. மீதி நிலங்கள் சட்ட சிக்கல்களாலோ அல்லது வேறு காரணங்களாலோ பயனற்றுப் போயின. நிலம் கொடுத்த நிலக்கிழார்கள் அனைவரும் வேண்டி விரும்பிக்  கொடுத்தனர் என்று சொல்ல முடியாது.  பலரும் நக்சல்களிடத்திளிருந்து பாதுக்காத்துகொள்ள பயந்து கொடுத்தனர். காந்தியை அதீதமாக நகலெடுக்கிறார் என்றும், காந்தி சொல்வதை எந்த ஓர் விவாதமும் இன்றி ஏற்றுகொள்வார் என்றும் வினோபா விமரிசிக்கப் பட்டார். அனைத்தையும் காட்டிலும், ஜெயபிரகாஷ் நாராயணன் இந்திரா அரசுக்கு எதிராக நடத்திய இயக்கத்தை அவர் ஆதரிக்கவில்லை,  இந்திரா கொண்டு வந்த அவசர கால சட்டத்தை, அது நாட்டிற்கு தற்பொழுதைய தேவை என்று ஆதரித்தது பலருக்கும் பெறும் அதிர்ச்சியை அளித்தது.

சில குறைகள் இருப்பினும் கூட, இந்தியாவில் காந்திக்குப் பிறகு , காந்திய வழிமுறைகளின் வலிமையை அதன் முக்கியத்துவத்தை உலக மக்களுக்கு வினோபா உணர்த்தினார்.அவரது அணுகுமுறையால் கவரப்பட்ட ஜெ.பி. தன் வாழ்நாள் முழுவதும் சர்வோதயா அமைப்புக்காக போராடுவேன் என்று உறுதி பூண்டார். காந்தியத்தை இன்றளவிலும் உயிர்ப்புடன் வைத்து இருக்க வினோபா ஓர் முக்கிய ஆளுமையாகும்.

உலக அளவில் பூதான இயக்கம் அஹிம்சை வழியில் முன்னெடுத்து செல்லப்பட்ட மிக சிறந்த இயக்கங்களில் ஒன்றாகும். அது ஓர் மிகப் பெரிய கனவு, நிறைவேறா கனவு தான்.  ஆனால் அர்த்தமற்ற கனவில்லை. நீர், சூரியன், வானம் மற்றும் காற்றை போல் நிலமும் இயற்கை ஒட்டுமொத்த உயிரினகளுக்கு கொடுத்த கொடை என்றே அவர் எண்ணினார். மக்கள் சக்தியே அரசின் சக்தியை காட்டிலும் மகத்தானது என்றார். காந்தியின் கனவுகளை சுமந்து திரிந்தார். கிராமம் கிராமமாக கால்நடையாக அன்பையும் கருணையும் அவரோடு கொண்டு சென்றார். 1982 ஆம் ஆண்டு நவம்பர் 15 அன்று உடல் உயிரை துறப்பதற்கு முன், ஒரு வார காலம் உபவாசமிருந்து அவரது உயிர் உடலை துறந்தது. மற்றும் ஒரு மகாத்மா நம் புலன்களுக்கு அப்பால் புறப்பட்டார்.

மேலதிகம் வாசிக்க:

http://www.mkgandhi.org/vinoba/vinoba.htm
http://www.markshep.com/peace/GT_Vinoba.html

-சுகி
 
 
காண்க:
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக