நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

15.9.12

தில்லியில் நடைபெறும் தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டுக்கு வாழ்த்து!



தினமணி நாளிதழும் தில்லி தமிழ்ச் சங்கமும் இணைந்து செப். 15, 16 தேதிகளில் புதுடில்லியில் நடத்திவரும் அகில  இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டுக்கு தேசிய சிந்தனைக் கழகம் அனுப்பிய வாழ்த்து:
14.09.2012

பெருமதிப்பிற்குரிய தினமணி ஆசிரியர்
        திரு. கே. வைத்தியநாதன் அய்யா அவர்களுக்கு,

வணக்கம்! 

தில்லி தமிழ்ச் சங்கத்துடன்  இணைந்து அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின்  மாநாட்டை  புதுதில்லியில் 'தினமணி' நடத்துவது குறித்து அறிந்து மகிழ்ந்தேன். ஓர் அற்புதமான நற்பணிக்கு தாங்கள் பிள்ளையார் சுழி இட்டிருக்கிறீர்கள். தமிழ் அமைப்புகள் அரசியல் காரணங்களால் பலவாறாகப் பிரிந்துள்ள சூழலில், அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற சிந்தனையே மிகவும் போற்றத் தக்கது. அதற்கு தமிழின் அடையாளமாக விளங்கும் 'தினமணி' நாளிதழ் கால்கோள் இடுவது சிறப்பு  மட்டுமல்ல பொருத்தமானதும் கூட.

பல்லாயிரம் ஆண்டு பாரம்பரிய  இலக்கியமும், நவீன இலக்கிய வீச்சும் கொண்ட,  முன்னைப்  பழமைக்கும் முன்னைப் பழமையான,  பின்னைப் புதுமைக்கும் புத்திளமை கொழிக்கின்ற  தமிழ்த் தாய்  புகழ் பாடவும், உலகு தழுவிய தமிழர்கள் நலம் காக்க ஒருங்கிணைந்து குரல் கொடுக்கவும், இன்றைய காலகட்டத்தில் நம்மிடையே ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. அதை இலக்கிய அமைப்புகளால் தான் சாதிக்க இயலும். அந்தக் கண்ணோட்டத்துடன் தான் இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது என்றே கருதுகிறேன். தங்கள் முயற்சி வெல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இந்த அரும்பணியில் தங்களுடன் இணைந்துள்ள தில்லி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. எம்.என்.கிருஷ்ணமணி, பொதுச்செயலாளர் திரு இரா.முகுந்தன் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது வந்தனங்கள்.  இம்மாநாடு  சிறப்புற நடந்தேற  'தேசிய சிந்தனைக் கழகம்' சார்பில் வாழ்த்துகிறோம்.

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத  மணித்திருநாடு!
வந்தேமாதரம்!


என,
ம.கொ.சி.ராஜேந்திரன்.
மாநில அமைப்பாளர்,
தேசிய சிந்தனைக்கழகம், தமிழ்நாடு.

காண்க:

தில்லி தமிழ் மாநாட்டில் அப்துல் கலாம் பேச்சு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக